புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தர கோரி கிராம மக்கள் புதுக்கோட்டை ஆட்சியரிடம் மனு...
புதுக்கோட்டை
புதிய ஆழ்துளை கிணறு, பேருந்து நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கிராம மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புதுக்கோட்டை ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் கணேஷ் தலைமை தாங்கினார். அவர், மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் நைனாமுகமது தலைமையில் தி.மு.க.வினர் மனு ஒன்றை ஆட்சியரிடத்தில் கொடுத்தனர். அந்த மனுவில், "புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு கோவில்பட்டி பகுதியில் நகராட்சியின் பராமரிப்பில் சுடுகாடு மற்றும் மயான கொட்டகை இருந்து வந்தது.
இதில் தற்போது மயான கொட்டகையை காணவில்லை. இதுகுறித்து ஆட்சியர் அலுவலகத்தில் நாங்கள் மனு அளித்திருந்தோம். ஆனால் இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் இனியாவது எங்களுக்கு புதிய மயான கொட்டகை அமைத்து தர வேண்டும். இல்லையென்றால் அனைத்து கட்சி நிர்வாகிகளையும், மக்களையும் திரட்டி போராட்டம் நடத்துவோம்" என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.
அதேபோன்று, கறம்பக்குடி தாலுகா புதுவளசல் கிராம மக்கள் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், "எங்கள் பகுதியில் குடிநீர் தேவைக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தரவேண்டும்.
பேருந்து நிறுத்தம் மற்றும் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும். எங்கள் பகுதிக்கு தனியாக நியாய விலைக்கடை அமைத்துத்தர வேண்டும். புதுவளசல் ஆதிதிராவிடர் மயானத்திற்கு செல்லும் மண்சாலையை தார்சாலையாக மாற்றித்தர வேண்டும்.
மேலும், குறைந்த மின்அழுத்தத்தை தவிர்க்கும் வகையில் புதிய மின்மாற்றி அமைத்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும்"
என்று அதில் கூறியிருந்தனர்.