போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது..! ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மின்வாரியம்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போராட்டம் நடத்த மின்வாரிய ஊழியர்கள் முடிவு செய்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் கிடைக்காது என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊதிய உயர்வு- மின் வாரிய ஊழியர்கள் போராட்டம்
விபத்தில்லா மின்வாரியம் அமைந்திட, மின் ஊழியர் உயிர் காத்திட 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், கேங்மேன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 6 சதமான ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு ஊர் மாற்றல் உத்தரவை உடனே வழங்கிட வேண்டும், தேர்வு செய்து நிலுவையில் உள்ள 5 ஆயிரம் கேங்மேன் பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்கிடு என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பாக நாளை தமிழகம் முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மின் பழுது பார்க்கும் பணிகள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
சம்பளம் கிடையாது- மின்வாரியம் எச்சரிக்கை
இதனையடுத்து, இந்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் கிடைக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாளை பணிக்கு வராதோர் விவரங்களை காலை 10.45 மணிக்குள்ளாக தலைமையிடத்திற்கு அனுப்புமாறு மண்டல பொறியாளர்களுக்கு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்தினால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் எந்த இடத்திலும் மின் தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்