லீவு தராததால் விரக்தி அடைந்த போலீஸ்காரர் தற்கொலை – காரைக்குடியில் பரபரப்பு…
சிவகங்கை
காரைக்குடியில், விடுமுறைக் கிடைக்காததால் விரக்தி அடைந்த காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார்.
காரைக்குடி மாவட்டத்தில், இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக தமிழ்நாடு சிறப்புக் காவல்படை பழனி 14-வது பட்டாலியன் காவலாளர்கள் முகாமிட்டுள்ளனர்.
மதுரை அருகே உசிலம்பட்டியைச் சேர்ந்த காவலரான அருண்பாண்டியன் (21) என்பவரும் இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார். இவருக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் விடுமுறை தருமாறு உயரதிகாரியிடம் கேட்டுள்ளார்.
ஆனால், விடுமுறை கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அருண்பாண்டியன், காரைக்குடி சங்கராபுரம் பகுதியில் தங்கியிருந்த தனியார் திருமண மண்டபத்தின் பின்புறப் பகுதியில் விஷம் குடித்து நேற்று மயங்கிய நிலையில் கிடந்தார்.
அதனைப் பார்த்த சக காவலாளர்கள் உடனே, அவரை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சேர்த்தனர். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை நடைப்பெற்று வருகிறது.
இதுகுறித்து, காரைக்குடி வடக்குக் காவல் நிலைய காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.