6 மாத குழந்தையை அமைச்சரின் காலடியில் போட்ட போக்குவரத்து ஊழியர்..! அதிரடியாக உத்தரவு போட்ட தமிழக அரசு
மனைவி இறந்த நிலையில் தனது குழந்தையை பராமரிக்க தேனிக்கு பணி மாறுதல் கேட்டு 6 மாத குழந்தையை அமைச்சர் சிவசங்கரின் காலில் போட்டு போக்குவரத்து ஊழியர் கோரிக்கை விடுத்த நிலையில், உடனடியாக அந்த ஊழியருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
இடமாறுதல் கேட்ட ஊழியர்
போக்குவரத்து துறையில் கோவை மண்டலத்தில் பேருந்து ஓட்டுநராக இருப்பவர் கண்ணன், இவர் பல ஆண்டுகாலமாக பணி புரிந்து வருகிறார். இவருக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாத குழந்தையும் உள்ளது. இவரது மனைவி டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதன் காரணமாக தனது குழந்தையை பராமரிக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து தனது வயதான தாய் மற்றும் தந்தை உதவியோடு குழந்தைகளை கோவையில் வைத்து பராமரித்து வந்துள்ளார். சொந்த ஊரான தேனியாக இருந்தாலும் கோவையில் இருந்து தனது வயதான பெற்றோரை வரவழைத்து பரமாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளோடு அமைச்சரை சந்தித்து கோரிக்கை
இதனையடுத்து கோவை மண்டல மேலாளரிடம் தன்னை தேனி பகுதிக்கு இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். பல முறை கோரிக்கை அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது. இந்தநிலையில் கோவை சுங்கம் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர் மற்றும்நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறையினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று முன் தினம் திறந்து வைத்தார். பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது மேடைக்கு ஆறு மாத குழந்தையுடன் வந்த அரசு பேருந்து ஓட்டுநர் கண்ணன் என்பவர், கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்து பணியிட மாறுதல் தொடர்பாக கோரிக்கை விடுத்தார்.
இடமாறுதல் உத்தரவு வழங்கிய அதிகாரிகள்
இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அந்த ஊழியரின் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று இரவு போக்குவரத்து துறை சார்பாக அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கோவை மண்டலத்தில் ஓட்டுநராக பணியாற்றும் கண்ணன் மதுரை மண்டலத்திற்கு மாற்றி அவரச உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
அமைச்சரின் காலடியில் குழந்தையை வைத்து கோரிக்கை விடுத்த ஊழியர்; அதிர்ச்சியில் உறைந்த அமைச்சர்