என் சாவுக்கு காரணம் வருமானவரித்துறை உயர் அதிகாரிதான் – கான்டிராக்டர் சுப்பிரமணியம் முதலமைச்சருக்கு கடிதம்…
நாமக்கல்
நாமக்கல்லில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர், கான்டிராக்டர் சுப்பிரமணியம் கடைசியாக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் என் சாவுக்கு காரணம் வருமானவரித்துறை உயர் அதிகாரி மற்றும் உறவினர் ஒருவர் என்று எழுதி அனுப்பியுள்ளார்.
நாமக்கல் – மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பில் வசித்து வந்தவர் கான்டிராக்டர் சுப்பிரமணியன் (58).
கடந்த மாதம் 7–ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அவருடைய உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
அதேநாளில் அமைச்சரின் நண்பர் என்ற முறையில் நாமக்கல்லில் உள்ள சுப்பிரமணியனின் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை நடந்தபோது சுப்பிரமணியன் வெளிநாடு சென்றிருந்ததால், நாடு திரும்பியதும் சென்னை வருமானவரித் துறை அலுவலகத்தில் இரண்டு முறை விசாரணைக்கு சென்றார்.
மூன்றாவது முறையாக 9–ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருவதாக கூறிவிட்டு வீடு திரும்பிய சுப்பிரமணியன், மோகனூர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள பண்னை வீட்டில் கடந்த 8–ஆம் தேதி குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலைச் சம்பவம் குறித்து அவரது மகன் சபரீஷ் மோகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் இளங்கோ வழக்குப்பதிவு செய்தார். இது தற்கொலையா? அல்லது தற்கொலைக்கு தூண்டுதலா? கொலையா? போன்ற கோணங்களில் விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே, காவலாளர்களிடன் முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சுப்பிரமணியன் தனது வேலைக்காரர் ஒருவர் மூலம் முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் உயர் அதிகாரிகளுக்கு நான்கு பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை அனுப்பி இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த கடிதத்தை காவலாளர்கள் கைப்பற்றினர். அதில், “தனது தற்கொலைக்கு உறவினரும், காண்டிராக்டருமான ஒருவரும், வருமானவரித்துறை உயர் அதிகாரி ஒருவரும்தான் காரணம்” என பரபரப்பு குற்றச்சாட்டு இருந்தது. அதன் அடிப்படையில் காவலாளர்கள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு பிரிவு) செந்தில் விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செந்திலிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று அவர் சுப்பிரமணியன் தற்கொலை வழக்கு விசாரணையை தொடங்கினார். முதலில் கான்டிராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்ட பண்ணை வீட்டுக்குச் சென்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செந்தில் அங்கு தோட்டக்காரராக பணியாற்றி வரும் பெருமாள், அவரது மனைவி ரத்தினம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர், நாமக்கல் ஆசிரியர் குடியிருப்பில் உள்ள சுப்பிரமணியனின் வீட்டிற்கு வந்த செந்தில், சுப்பிரமணியனின் மனைவி சாந்தி, மகன் சபரீஷ், மகள் அபிராமி, மருமகன் அரவிந்த் மற்றும் உறவினர்களிடம் சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தினார்.
மேலும், விசாரணையின்போது, சுப்பிரமணியன் எழுதியதாக கூறப்படும் கடிதத்தையும் அவரின் குடும்பத்தாரிடம் காண்பித்து, இது சுப்பிரமணியனின் கையெழுத்துதானா? என கேட்டறிந்தார்.
அப்போது அவர்கள் கடிதத்தில் உள்ள கையெழுத்து சுப்பிரமணியனின் கையெழுத்துதான் என உறுதி செய்தனர்.
இதனையடுத்து காவலாளர்கள், சுப்பிரமணியன் தனது தற்கொலைக்கு காரணம் யார்? என கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். பின்னர், அவர்களை கைது செய்யவாரா என்பது சஸ்பென்ஸ்.