கோயில் தேர் விபத்தில் 11 பேர் பலி...! பிரதமர் மோடி வேதனை...ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
தஞ்சையில் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்திற்கான கோயில் திருவிழாவில் தேர் மீது மின்கம்பி உரசியதில் 11 பேர் இறந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் இழப்பீடு வழங்கியும் உத்தரவிட்டுள்ளார்.
கோயில் விழாவில் விபத்து
தஞ்சாவூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்திற்கான கோயில் உள்ளது. இந்த கோயிலின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இரவு 12 மணிக்கு ஆரம்பமானது. 15 அடி உயரம் கொண்ட தேர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக சென்ற தேரை சாலையின் வளைவில் இழுத்துள்ளனர். அப்போது அருகே இருந்த பள்ளத்தில் தேரில் சக்கரம் இறங்கியுள்ளது. இதனையடுத்து தேர் உச்சியானது மின் கம்பி மீது மோதியுள்ளது. அப்போது ஏற்பட்ட விபத்தில் தேர் மீது தீ பிடித்தும், மின்சாரம் தாக்கியும் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. மேலும் 15 க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் 4 பேரின் உடல்நிலை மோசமாக நிலையில் உள்ளது.
பிரதமர் மோடி இரங்கல்
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கி உத்தரவிட்டுள்ளார். சம்பவ இடத்தையும் நேரில் சென்று பார்வையிட உள்ளார். இந்தநிலையில் பிரதமர் மோடி தஞ்சை களிமேடு கோயில் தேர் விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழகத்தின் தஞ்சாவூரில் நடந்த அசம்பாவிதம் மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த துக்கமான நேரத்தில் தன்னுடைய இரங்கையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புவதாக தெரிவித்த பிரதமர், இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சமும், காயம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரமும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் மோடி அந்த டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்..