தஞ்சை கோயில் தேர் விபத்து.! சம்பவ இடத்திற்கு விரைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
தஞ்சையில் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்திற்கான கோயில் திருவிழாவில் தேர் மீது மின்கம்பி உரசியதில் 11 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு செல்லவுள்ளார்.
கோயில் திருவிழாவில் மின் விபத்து
தஞ்சாவூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்திற்கான கோயில் உள்ளது. இந்த கோயிலின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இரவு 12 மணிக்கு ஆரம்பமானது. 15 அடி உயரம் கொண்ட தேர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக சென்ற தேரை சாலையின் வளைவில் இழுத்துள்ளனர். அப்போது அருகே இருந்த பள்ளத்தில் தேரில் சக்கரம் இறங்கியுள்ளது. இதனையடுத்து தேர் உச்சியானது மின் கம்பி மீது மோதியுள்ளது. அப்போது ஏற்பட்ட விபத்தில் தேர் மீது தீ பிடித்தும், மின்சாரம் தாக்கியும் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
11 பேர் பலியான பரிதாபம்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நேரில் சென்ற விசாரணை நடத்தினர். தொடர்ந்து உயிரிழந்த உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்தநிலையில் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் காலை 9 மணிக்கு விமானம் மூலம் தஞ்சை பகுதிக்கு சென்றுள்ளார். தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவிழாவில் ஏற்பட்ட விபத்து தொடர்பான துயரமான செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்த்தாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
தஞ்சை விரையும் முதலமைச்சர்
மேலும், இவ்விபத்தில் சிக்கி சிகிச்சையில் உள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும், விபத்து பகுதியில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் உடனடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தஞ்சாவூர் களிமேடு கிராமத்துக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க முதலமைச்சர் ஸ்டாலின் செல்கிறார்.
இதையும் படியுங்கள்...
தஞ்சை கோயில் தேர் திருவிழாவில் 11 பேர் பலி..! விபத்து நடந்தது எப்படி நேரில் பார்த்தவரின் அதிர்ச்சி தகவல்...