செல்போனுக்கு பணம் தருவதில் ஏற்பட்ட தகராறில் எட்டாம் வகுப்பு மாணவர் கொலை; போலீஸ் விசாரணை...
வேலூர்
வேலூரில், செல்போனுக்கு பணம் தருவதில் ஏற்பட்ட தகராறில் எட்டாம் வகுப்பு மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கை காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்..
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே வேப்பங்கால் பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் மகன் சந்தோஷ் (13). இவர், பொய்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படித்து வந்தார்.
சந்தோஷ் வைத்திருந்த செல்போனை அதே பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால், அதற்கான பணத்தைத் தரவில்லையாம்.
இந்த நிலையில், புதன்கிழமை மாலை பள்ளி முடிந்த பிறகு பணம் தருவதாக சந்தோஷை அந்த மாணவர் அழைத்துச் சென்றுள்ளார். அதன்பின்னர், சந்தோஷ் வீட்டிற்குச் செல்லவில்லை. இதனையடுத்து அவரது பெற்றோர் பல இடங்களில் சந்தோஷை தேடி உள்ளனர். இருந்தும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த சமயத்தில் லத்தேரி அருகே வாழ்வாங்குன்றம் கானாற்று பகுதியில் மாணவர் சந்தோஷின் உடல் கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த லத்தேரி காவலாளர்கள் அங்குச் சென்று சந்தோஷின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த காவலாளர்கள் விசாரணையும் தொடர்ந்தனர். அதில், வாங்கிய செல்போனுக்கு பணம் தருவதாக அழைத்துச் சென்று மாணவர் சந்தோஷை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.