போலீஸ் துரத்தி அடித்ததில் கடலில் குதித்த மீனவர் பலி...! காவல்துறைக்கு எதிராக வெகுண்டெழுந்த ஊர்மக்கள்...!
சென்னை காசிமேட்டில் நேற்றிரவு படகில் சீட்டு விளையாடியவர்களை போலீசார் சுற்றிவளைத்ததால் பயந்து கடலில் குதித்த மீனவர் தமிழரசன் உயிரிழந்தார். இதனால் சம்பந்தபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடலை வாங்க மறுத்து ஊர்பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காசிமேடு மீன்படி துறைமுகத்தில் தமிழரசன் என்பவருக்கு சொந்தமாக விசைப்படகு ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு தனது நண்பர்களுடன் விசைப்படகில் அமர்ந்து சீட்டு விளையாடி கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த போலீசார், அவர்களை விரட்டியடித்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் தலையில் காயங்களுடன் மயங்கிய நிலையில் தமிழரசன் கடலில் குதித்துள்ளார். மற்றவர்கள் தெறித்து ஓடியுள்ளனர்.
இதையடுத்து தமிழரசனை தீயணைப்பு படையினர் இரவு முழுவதும் தேடிவந்தனர். இந்நிலையில், இன்று காலை உயிரிழந்த நிலையில் தமிழரசன் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
தமிழரசின் இறப்பிற்கு போலீசார் தாக்குதல் நடத்தியதே காரணம் எனக்கூறி உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடலை வாங்க மறுத்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, தமிழரசனின் மனைவி தீபாவிற்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும், குழந்தைகளின் கல்வி செலவை முழுவதுமாக அரசு ஏற்கும் எனவும் காவல்துறை துணை ஆணையர் உத்தரவாதம் அளித்ததை அடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல உறவினர்கள் அனுமதித்தனர்.