டிஜிபி பதவி நீட்டிப்பு வழக்கு – வருமானவரித்துறை ஆவணங்கள் தாக்கல்…!!!
டிஜிபி பதவி நீட்டிப்பு குறித்து வருமான வரித்துறை ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தது.
சில நாட்களுக்கு முன்பு பான், குட்கா அதிபர்களிடம் அமைச்சர் விஜய பாஸ்கர் , ஐபிஎஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் உள்ளிடோர் லஞ்சம் வாங்கியதாக ஊடகங்களில் ஆதாரத்துடன் வெளியாகியது.
இதனிடையே தமிழக டி.ஜி.பி.யாக பணியாற்றிய டி.கே.ராஜேந்திரனின் பதவி காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து மீண்டும் 2 ஆண்டுகள் பணி நீடிப்பு வழங்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டிருந்தது.
இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில் டிஜிபியாக இருக்கும் டிகே ராஜேந்திரன் பணம் பெற்றுக் கொண்டு குட்கா விற்பனையை அனுமதித்ததாக குற்றசாட்டு எழுதுள்ளது.
எனவே அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் பணி நீடிப்பு அரசாணையை ரத்து செய்து விட்டு இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் வருமான வரித்துறை ஆவணங்கள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கவரில் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும் வருமான வரித்துறை சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்ய 5 நாட்கள் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று டிஜிபி பதவி நீட்டிப்பு குறித்து வருமான வரித்துறை ஆவணங்களை தாக்கல் செய்தது. சீலிடப்பட்ட கவரில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.