மாணவிகளை தவறாக பேசிய பேராசியரை கண்டித்து கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக தர்ணா போராட்டம்...
திருவாரூர்
மாணவிகளை தவறாக பேசிய பேராசிரியரை கண்டித்து திரு.வி.க. அரசு கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக வகுப்பை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம், திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் பி.பி.ஏ. துறைக்கு தலைவர் இல்லாததால் வேறு துறை பேராசிரியர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பந்தபட்ட பேராசிரியர் பி.பி.ஏ. படிக்கும் மாணவிகளை தவறாக பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி சம்பந்தபட்ட மாணவிகள், கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் நேற்று முன்தினம் திரு.வி.க கல்லூரி பி.பி.ஏ. மாணவ - மாணவிகள், அந்த பேராசிரியரை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின் மூலமும் கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து நேற்று 2-வது நாளாக பி.பி.ஏ. மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சம்பந்தபட்ட பேராசிரியரை மாற்றம் செய்து பி.பி.ஏ. துறைக்கு புதிய தலைவர் நியமிக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் முழக்கங்களை எழுப்பினர்.