- Home
- Tamil Nadu News
- மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
டிஜிட்டல் நுழைவு பயணச்சீட்டுகளில் உள்ள தனித்துவமான QR குறியீடுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்களில் இலவச பயணம்
டி20 உலகக்கோப்பையில் இந்தியா vs ஜிம்பாப்வே அணிகள் இடையிலான சூப்பர் 8 போட்டி நாளை (பிப்ரவரி 24) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை நேரில் காண டிக்கெட் வைத்திருப்பவர்கள் நாளை மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ''சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் (TNCA) இணைந்து, பிப்ரவரி 26, 2026 (நாளை) அன்று சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா vs ஜிம்பாப்வே கிரிக்கெட் போட்டியைப் பார்வையிட வருபவர்களுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்காக மெட்ரோ ரயில் சேவையை நீட்டித்துள்ளது.
இந்தியா vs ஜிம்பாப்வே போட்டி டிக்கெட் வைத்திருந்தால் போதும்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மெட்ரோ பயணங்களை ஸ்பான்சர் செய்கிறது. கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை பயன்படுத்தி போட்டி நடைபெறும் நாளில் பயணிகள் எந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு இடையிலான சுற்று பயணத்தினை மேற்கொள்ளலாம்.
தனித்துவமான QR குறியீடுகள்
டிஜிட்டல் நுழைவு பயணச்சீட்டுகளில் உள்ள தனித்துவமான QR குறியீடுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் பிப்ரவரி 26, 2026 (நாளை) அன்று ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.
சிறப்பு மெட்ரோ சேவைகள்
அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am – 27.02.2026), வழித்தடம் 1-ல் (நீலவழித்தடம்) விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி ரயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am – 27.02.2026) இயக்கப்படும்.
சிறப்பு மெட்ரோ ரயில் சேவை நடைபெறும் காலத்தில் (அதாவது இரவு 11:00 மணிக்குப் பின்பு), வழித்தடம் 2-ல் (பச்சை வழித்தடம்) உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் மட்டுமே மாறி செல்ல இயலும்.
முன்கூட்டியே ரயில் நிலையம் வர வேண்டும்
பயணிகள் கடைசி ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வந்து விட வேண்டும். மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருவதற்கு முன்பே, பயணிகள் தங்களது பயணச்சீட்டுகளை (Tickets) அந்தந்த மொபைல் செயலி அல்லது இணையதளம் மூலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தானியங்கி நுழைவு வாயில்களில் உங்களது QR குறியீட்டை காண்பிக்கும் போது, நுழைவதிலும், வெளியேறுவதிலும் தாமதமோ அல்லது சிரமமோ ஏற்படாமல் இருக்க, QR குறியீட்டை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பிரத்யேக சலுகையைப் பயன்படுத்தி, போட்டி நடைபெறும் இடத்திற்குச் சென்று, தடையில்லா பயணத்தை அனுபவியுங்கள்' என்று கூறப்பட்டுள்ளது.

