Geetha jeevan: எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை அடிமை ஆட்சி என விமர்சித்த அவர், தமிழ்நாடு டெல்லிக்கு என்றும் தலை வணங்காது என உறுதியாகத் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது உறுதி. தமிழ்நாடு தலை குனியாது. டெல்லிக்கு தமிழ்நாடு என்றும் தலை வணங்காது என அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் திமுக சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது பரப்பரை பொதுக்கூட்டத்தில் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்: எடப்பாடி பழனிசாமி எதுவுமே தெரியாமல், என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார். அவருடைய ஆட்சிக் காலத்தில் ஒன்றிய அரசின் அடிமை ஆட்சி தான் நடத்தினார்.

பெரிய கூட்டணி அமைந்துவிட்டது போல் பந்தா பண்ணிக் கொள்கிறார். இதே கூட்டணி தான் 2021இல் இருந்தது. அப்போது திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. நாடாளுமன்ற தேர்தலின் போது பிரிந்து நின்றார்கள். இப்போது மீண்டும் சேர்ந்து நிற்கிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணி கொள்கை கூட்டணி. தமிழ்நாடு வளர்ச்சி பெற வேண்டும், மக்கள் முன்னேற வேண்டும், வாழ்வாதாரம் உயர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையோடு உள்ளது.

இன்று தமிழகம் முழுவதும் தொழில் வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணி தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு திட்டத்தின் மூலமாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வளர்ச்சியை நோக்கி நடைபோட செய்துள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது உறுதி. தமிழ்நாடு தலை குனியாது. டெல்லிக்கு தமிழ்நாடு என்றும் தலை வணங்காது. தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கும் என்றார்.