கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய கோரி போராட்டம் நடைபெற்ற நிலையில், போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில்,  சம்பவ இடத்திற்கு உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியை செல்லுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

போராட்டத்தில் வன்முறை

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மாணவி சாவில் மர்மம் இருப்பதாகப் புகார் தெரிவித்து உறவினர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தியுள்ளனர்.இதனையடுத்து மாணவியின் இறப்பிற்கு நியாயம் கேட்டு மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து பள்ளி வளாகத்திற்குள் உள்ளே சென்ற வன்முறையாளர்கள் பள்ளி வாகனத்திற்கு தீவைத்தனர். மேலும் பள்ளியில் இருந்த பொருட்களை சூறையாடி சென்றனர். இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியதை அடுத்து போலீசார் தடியடியும் துப்பாக்கி சூடும் நடத்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலையில் மர்மம்..! நடந்தது என்ன.? தாய் கண்ணீர் புகார்

பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்

இந்தநிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது என்றும், மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளதாகவும், அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுமாறு முதலமைச்சர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

கள்ளக்குறிச்சி வன்முறைக்கு வெளியூர் நபர்களே காரணம்.! மாணவி மர்மச்சாவு மட்டும் காரணம் இல்லை - அன்புமணி