The Chief Minister has ordered to open water from Mannararu and Soothpattiram water reservoir in Theni district.

தேனி மாவட்டம் மஞ்சளாறு மற்றும் சோத்துப்பாறை நீர்தேக்கத்திலிருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக வரும் 15ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தேனி மாவட்டம் மஞ்சளாறு நீர்தேக்கத்தில் இருந்து பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கும் முதல் போக சாகுபடிக்காக வரும் 15 ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதனால் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5, 259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், சோத்துப்பாறை நீர்தேக்கத்திலிருந்து பழைய நன்செய் நிலங்களுக்கும் புதிய புன்செய் நிலங்களுக்கும் பாசன வசதிக்காக பெரிய குளம் நகராட்சி குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும், இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள 2, 865 ஏக்கர் நிலங்களின் பாசன தேவையும், பெரியகுளம் நகராட்சியின் குடிநீர் தேவையும் பூர்த்தி அடையும் என தெரிவித்துள்ளார்.