பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்று செயல்படுத்தணும் – விவசாயிகள் தீர்மானம்…
தேனி
பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்று செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கம்பத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்து.
தேனி மாவட்டம், கம்பத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாடு நேற்று நடைப்பெற்றது.
இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் கே.ராஜப்பன் வரவேற்றார். அகில இந்திய துணைத் தலைவர் விஜூ கிருஷ்ணன் மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினார்.
இந்த மாநாட்டில் “தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
வறட்சியால் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் மரணமடைந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த விவசாயிகள் குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும்.
பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்று செயல்படுத்த வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் மாநிலச் செயலர் விஜயமுருகன், அகில இந்திய பொதுச் செயலர் அன்னன் முல்லா, துணைத் தலைவர் கே.வரதராஜன், விவசாயத் தொழிலாளர் சங்க அகில இந்தியத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு, மாநிலத் தலைவர் ஏ.லாசர் ஆகியோர் பேசினர்.