The Central Government wrong of Economic Policies affecting vellaiyan

திருநெல்வேலி

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், பரப்பாடியில் தமிழ்நாடு வணிகர்நலப் பேரவை சங்க தொடக்க விழாவும், வணிகர்களின் ஆலோசனைக் கூட்டமும் நேற்று நடந்தது. 

இதற்கு பரப்பாடி சங்க தலைவர் ஆல்பர்ட் தலைமை வகித்தார். செயலாளர் செல்லத்துரை, பொருளாளர் பச்சை பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருநெல்வேலி மாவட்ட தலைவர் ஆர்.கே.காளிதாசன், மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், தெற்கு மாவட்ட தலைவர் கே.செல்வகுமார், மாவட்ட பொருளாளர் மீரான், வள்ளியூர் சங்க தலைவர் எட்வின் ஜோஸ், செயலாளர் கவின்ஸ்வேந்தன், மாநில துணை தலைவர் சுல்தான் அலாவுதீன், பாளையங்கோட்டை சங்க தலைவர் சாலமோன் ஆகியோர் பேசினர். 

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் புதிய அலுவலகத்தை தொடங்கி வைத்து பேசினார். 

அப்போது அவர், "வணிகர்கள் சங்க பேரவை வணிகர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழும். ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு. எனவே வணிகர்கள் ஒன்று பட்டு செயல்படுவோம். 

பரப்பாடியில் வியாபாரிகளில் இளைஞர்களாக இருப்பவர் இரவு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். 

மத்தியில் ஆளும் அரசு 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதித்து வருகிறது. ஆன்–லைன் வர்த்தகத்தை அனுமதித்து சில்லறை வணிகர்களுக்கு எதிராக செயல்படுகிறது. 

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வருகிற மே மாதம் காஞ்சீபுரத்தில் நடைபெறும் வணிகர்கள் மாநாட்டுக்கு திரளாக கலந்து கொள்ள வேண்டும்" என்று பேசினார். 

கூட்டத்தின் இறுதியில் பரப்பாடி வணிகர்கள் நலச்சங்க சட்ட ஆலோசகர் ஜெபக்குமார் நன்றித் தெரிவித்தார்.