ஐந்தாவது நாளாக இரயிலை மறித்து போராடிய காவிரி உரிமை மீட்புக் குழு; 73 பேர் கைது…
புதுக்கோட்டை
காவிரி பிரச்சனைக்கு தீர்வு கேட்டு, காவிரி உரிமை மீட்புக் குழு தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடத்திய இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 73 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
காவிரி உரிமை மீட்புக் குழு தொடர்ந்து ஐந்தாவது நாளாக இரயில் மறியல் போராட்டத்தை நேற்றும் நடத்தினர்.
“காவிரி தீர்ப்பாயத்தைக் கலைத்துவிட்டு ஒற்றைத் தீர்ப்பாயச் சட்ட முன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க வேண்டும்.
மேகேதாட்டில் கர்நாடக அரசுப் புதிய அணைக் கட்டுவதைத் தடுக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கடந்த மே 15-ஆம் தேதி முதல் டெல்டா மாவட்டங்களில் தொடர் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் நேற்றுத் தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்தது. தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே நாச்சியார்பட்டியில் காலை 10 மணியளவில் வந்த திருச்சி - சென்னை சோழன் விரைவு இரயிலை 40 நிமிடங்கள் மறித்து முழக்கங்கள் எழுப்பினர்.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத் தலைவர் சுப.உதயகுமார், திரைப்பட இயக்குநர் களஞ்சியம், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் ஐயனாபுரம் சி.முருகேசன், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் த.மணிமொழியன், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டத் தலைவர் ச.சிமியோன் சேவியர்ராஜ் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும், இதில் கலந்து கொண்டு இரயிலை மறித்த 9 பெண்கள் உட்பட 73 பேர் காவலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.