தேனி
தேனியில் அமைதி பேச்சுவார்த்தைக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு வராததால் “வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தங்களின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம்” என்று மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி கம்போஸ்ட் ஓடைத்தெருவில் பழைய குப்பைக் கிடங்கு அமைந்திருந்தது. இந்த இடத்தில் நரிக்குறவர் சமுதாய மக்கள், நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் குடிசை அமைத்தனர்.
இந்த குடிசைகளை கடந்த 13–ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் வலுகட்டாயமாக அகற்றியது. இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நேற்று முன்தினம் தேனி தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. தாசில்தார் இல்லாததால் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, நேற்று மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. இதற்காக பொதுமக்கள் தேனி தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால், தாசில்தார் வேறு ஒரு அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்திற்காக பெரியகுளம் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்குச் சென்று விட்டதாக அங்கிருந்த அலுவலர்கள் கூறினர்.
இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து புறப்பட்டு வந்து, தேனி அல்லிநகரம் வள்ளிநகரில் காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கினர்.
சாலையோரம் நிழற்பந்தல் அமைத்து, அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தங்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரை காத்திருக்கப் போவதாக அறிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த தேனி காவலாளர்கள் மற்றும் அல்லிநகரம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், நீங்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம். வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தங்களின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்று அவர்கள் அறிவித்தனர்.
பின்னர், அங்கேயே அவர்கள் சமையல் செய்து மதிய உணவு சாப்பிட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரவு 7 மணியளவில் பெரியகுளம் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) கார்த்திகேயன், தாசில்தார் ஷேக் அயூப் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாளை (அதாவது இன்று) தாலுகா அலுவலகத்திற்கு ரேசன் அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்தால், மனுக்களை பரிசீலனை செய்து தகுதியானவர்களுக்கு வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.
