தஞ்சாவூர் தேர்விபத்து குறித்து சம்பவம் நடத்த இடம், பாதிக்கப்பட்ட தேர், உயர் மின்னழுத்த லைன் ஆகிய இடங்களில் ஒரு நபர் குழு விசாரஐ நடத்தியது .பின்னர் தேர் விபத்து குறித்து இரு வேறு அறிக்கைகள் அளிக்கப்படும் என்று முதன்மை செயலாளர் ஜெய்ந்த் தெரிவித்தார்.
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த 26-ம் தேதி இரவு நடைபெற்ற தேர்த் திருவிழாவில், மின்சாரம் தாக்கி மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த தீ விபத்தில் காயமடைந்த 17-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, விபத்து குறித்து விசாரிக்க வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில், ஒருநபர் குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் ஜெயந்த், தேர் விபத்து குறித்து களிமேடு கிராமத்தில் விசாரணை நடத்தினார். மேலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் களிமேடு கிராமத்தில், விபத்து நடந்த இடம், விபத்துக்குள்ளான தேர், அதன் மேல் பகுதியில் செல்லும் உயர் மின் அழுத்த லைன் ஆகியவற்றை ஆய்வு செய்தார். விழாக்குழு, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,”முதற்கட்டமாக விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து அறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவித்தார. பின்னர், வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துக்களை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்து அது குறித்தும் அரசுக்கு அறிக்கை அளிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். அத்துடன், விபத்து குறித்து யாரேனும் தகவல் தெரிவிக்க விரும்பினால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூறலாம் என்றும் பேட்டியளித்தார்.
முன்னதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர், மின்துறை, நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மருத்துவர்கள் குழு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிகாரிகளிடமும் விபத்து குறித்த தகவல்களை முதன்மைச் செயலாளர் கேட்டறிந்தார்.
