"கோடை விடுமுறையில் வெளியூர் போக கூடாது.." - ஆசிரியர்களுக்கு ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்….
மே மாதம் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் , கோடை விடுமுறையில் வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முன்கூட்டியே தொடங்கி விட்டன. அதே நேரத்தில் விடைத்தாள் திருத்தும் பணிகளையும், வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு, ஏப்ரல் மாதம் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மே மாதத்தில் கோடை விடுமுறையை கொண்டாட ஆசிரியர்கள் பலரும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக கோடை விடுமுறையில் வெளியூர் செல்லக்கூடாது என்று, மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மே மாதம், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதால், கோடை விடுமுறையில், ஆசிரியர்கள் தலைமையிடத்தை விட்டு எக்காரணம் கொண்டும், அனுமதி பெறாமல் செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பாக வருவாய் துறையினரால் வழங்கப்படும் பணி ஆணைகளை பெற்று ஆசிரியர்கள பணிபுரிய வேண்டும். என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது 10 மற்றும் 12 ஆம்வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடப்பதால், தேர்தல் ஆணைய சுற்றறிக்கையை, பள்ளிகளுக்கு தெரியப்படுத்தவில்லை என்றும் தேர்வுகள் முடிந்ததும், தலைமையாசிரியர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு இது குறித்து தெரிவிக்கப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.