அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கேட்டு டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...
கிருஷ்ணகிரி
அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், புறநகர் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சக்திவேல், சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலர் மணி, பாட்டாளி தொழிற்சங்க மாவட்டச் செயலர் விநாயகம், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்டச் செயலர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "டாஸ்மாக் ஊழியர்களை பணி வரன் முறைப்படுத்தி, அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
பணி மறுக்கப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்" உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.