- Home
- Tamil Nadu News
- ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? கவலை வேண்டாம்.. மீண்டும் புதுப்பிப்பது எப்படி? இதோ எளிய வழிமுறை!
ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? கவலை வேண்டாம்.. மீண்டும் புதுப்பிப்பது எப்படி? இதோ எளிய வழிமுறை!
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை. நிராகரிப்புக்கான காரணத்தை சரிசெய்து, மறுபரிசீலனை வாய்ப்பை பயன்படுத்தி எளிதாக ஸ்மார்ட் கார்டை பெறுவதற்கான வழிமுறைகள்.

ரேஷன் கார்டுகள் இருந்தால் மட்டுமே அரசின் எந்தவொரு திட்டங்களை பெற முடியும். குறிப்பாக மகளிர் உரிமை தொகை திட்டம், பொங்கல் பரிசு தொகுப்பு போன்றவைகள் ரேஷன் அட்டைகள் இருந்தால் மட்டுமே வாங்க முடியும். அந்த அளவுக்கு ரேஷன் கார்டு மிக முக்கியம். இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணத்தை சரிசெய்து எளிதாக மீண்டும் விண்ணப்பிக்கும் வகையில் தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.
அதாவது புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் போதிய ஆவணங்கள் சரிவர இல்லாதது மற்றும் பல்வேறு காரணங்களுக்காக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இதனால் மீண்டும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. மறுபரிசீலனை வாய்ப்பை பயன்படுத்தி தகுதியுள்ளவர்கள் தங்களின் புதிய ஸ்மார்ட் கார்டை பெற அரசு வழிவகை செய்துள்ளது.
விண்ணப்பம் நிராகரிக்க காரணம்?
மறுபரிசீலனை விண்ணப்பிக்கும் முன் உங்கள் விண்ணப்பம் எதற்காக நிராகரிக்கப்பட்டது என்பதை கண்டறிவது ரொம்ப முக்கியம். பொதுவாக கீழ்க்கண்ட காரணங்களுக்காக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன:
ஆவணக் குறைபாடு
சமர்ப்பிக்கப்பட்ட முகவரி சான்று அல்லது அடையாள சான்று தெளிவாக இல்லாமல் இருந்தால் நிராகரிக்கப்பட்டு இருக்கலாம்.
பெயர் நீக்கம்
குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவரின் பெயர் ஏற்கனவே வேறொரு ரேஷன் கார்டில் பெயரில் இருப்பது காரணமாக இருக்கலாம்.
கள ஆய்வு
வருவாய் ஆய்வாளர் அல்லது வட்ட வழங்கல் அலுவலர் வீட்டிற்கு ஆய்வுக்கு வரும்போது விண்ணப்பதாரர் அங்கு வசிக்காமல் இருப்பது முக்கிய காரணங்களாக இருக்கலாம்.
தவறான தகவல்கள்
எரிவாயு இணைப்பு அல்லது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களில் பிழைகள் இருந்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்.
மறுபரிசீலனை என்றால் என்ன?
நிராகரிக்கப்பட்ட ஒரு விண்ணப்பத்தை திருத்தப்பட்ட ஆவணங்களுடன் மீண்டும் ஆய்வு செய்வதே மறுபரிசீலனை ஆகும். இதற்காக நீங்கள் புதிதாக முதலில் இருந்து விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. பழைய விண்ணப்ப எண்ணைக் கொண்டே உங்கள் பிழைகளைச் திருத்தம் செய்து அதிகாரிகளிடம் முறையிடலாம்.
மறுபரிசீலனை செய்ய வேண்டிய வழிமுறைகள்
உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட செய்தி குறுஞ்செய்தியாக வந்தாலோ அல்லது ஆன்லைனில் சரி பார்க்கும் போது தெரிந்தாலோ, நீங்கள் செய்ய வேண்டியது என்னென்ன என்பதை விரிவாக பார்ப்போம்.
ஆன்லைன் ஸ்டேட்டஸ் சரிபார்த்தல்
TNPDS இணையதளத்தில் உங்கள் விண்ணப்ப எண்ணைச் சமர்ப்பித்து, நிராகரிப்புக்கான காரணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.ள்.
ஆவணங்களைச் சரிசெய்தல்
என்ன காரணத்திற்காக உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதோ, அதற்கான சரியான ஆவணத்தைத் தயார் செய்ய வேண்டும்.
வட்ட வழங்கல் அலுவலரை அணுகுதல்
உங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரை நேரில் சந்திக்க வேண்டும். அங்கு ஒரு முறையீட்டுக் கடிதத்துடன், சரியான ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மறுபதிவேற்றம்
சில நேரங்களில் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவே விடுபட்ட ஆவணங்களை மீண்டும் பதிவேற்றம் செய்து மறுபரிசீலனைக்கு அனுப்ப முடியும்.
இ-கேஒய்சி மற்றும் நேரடி ஆய்வு
மறுபரிசீலனை விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, அதிகாரிகள் மீண்டும் உங்கள் இருப்பிடத்திற்கு வந்து நேரடி ஆய்வு செய்வார்கள். அப்போது குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்கள் மற்றும் வசிப்பிடச் சான்றுகள் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் கைரேகையை பதிவு செய்திருப்பது விண்ணப்பம் விரைவாக அங்கீகரிக்கப்பட உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், குறைந்தது 15 நாட்களுக்குள் முறையீடு செய்வது சிறந்தது. போலித் தகவல்களைத் தவிர்த்து, உண்மையான ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

