தமிழகத்தில் மதுவாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழகத்தில் மதுவாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளுடன் கூடிய பார்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், இந்த டெண்டர் அவசரமாக விடப்பட்டுள்ளதால், இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் டெண்டரை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுபான கடைகளுடன் கூடிய பார்களில் இருந்துதான் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதால், அந்த பார்களுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களும், இழப்புக்களும் அதிகரித்து வருகிறது. மாணவ, மாணவிகள் மதுவுக்கு அடிமையாவது தமிழகத்தில் அதிகரித்துள்ளது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். 

தொடர்ந்து பேசிய நீதிபதிகள் தமிழகத்தில் மதுவாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்கக் கூடாது. மேலும் டாஸ்மாக் கடை திறந்திருக்கும் நேரத்தை பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 10 மணி வரை ஏன் மாற்றக்கூடாது எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 12-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.