சுற்றுலா பட்டியலில் இருந்து ஒகேனக்கல் நீக்கம் - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிவிப்பு
சிறப்பு சுற்றுலா பட்டியலில் இருந்து ஒகேனக்கல்லை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நீக்கி உள்ளது. இதையடுத்து சென்னையில் இருந்து ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மே, ஜூன், ஜூலை ஆகிய 3 மாதங்கள் சுற்றுலா பயணிகளை ஏற்காடு மற்றும் ஒகேனக்கல்லுக்கு அழைத்து செல்வார்கள்.
இந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. தற்போது காவிரி ஆறு வறண்டுள்ளதால் ஒகேனக்கல் அருவி பகுதியில் தண்ணீர் வரத்து முற்றிலும் நின்று போனதால் பாறைகள் மட்டுமே காட்சி அளிக்கிறன.
இதனால் இந்த ஆண்டு சிறப்பு சுற்றுலா பட்டியலில் இருந்து ஒகேனக்கல்லை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இதைடுத்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், சென்னையில் இருந்து ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் அழைத்து வரப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது..
தொடர் வறட்சி காரணமாக, தற்போது யாரும் ஒகேனக்கல்லுக்கு வருவதில்லை. இதனால் ஒகேனக்கல்லில் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். சமையல் கலைஞர்கள், மீன் வறுவல் வியாபாரம் செய்பவர்கள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.