Tamilnadu Rain: மீண்டும் மிரட்டும் மழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்கள்.. எங்கெங்கு விடுமுறை.?
மீண்டும் வெள்ளப் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை அதிகனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 8 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் கடந்த 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் 20 செ.மீ.க்கும் அதிகமாக பெய்த கன மழையால் சென்னை மாநகரமே வெள்ளக் காடானது. தி.நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், கே.கே. நகர், கொளத்தூர், வேளச்சேரி, அம்பத்தூர் மற்றும் தென்சென்னையின் புற நகர்ப் பகுதிகள், வடசென்னையின் புறநகர்ப் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. சென்னையில் கடந்த 5 நாட்களாக மழை பெய்யாத நிலையில், தேங்கிய வெள்ள நீர் பெரும்பாலான பகுதிகளில் வடிந்துவிட்டது.
இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று இரவு கன மழையும், நாளை அதி கன மழையும் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், மீண்டும் சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இதற்கிடையே அதி கனமழை எச்சரிக்கை காரணமாக 8 மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அறிவிப்புகளை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.