ராஜஸ்தானின் பெயரை கெடுத்த விடலையும், இளைஞனும்: கொலையாளிகளின் படத்தை வெளியிட்டது போலீஸ்...
இந்திய காவல்துறையையே அதிர வைத்திருக்கிறது சென்னை காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டியின் கொலை.
கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் சென்று, கொள்ளையர்களை வளைத்துப் பிடிக்க முயலும்போது அவர்கள் ஆயுத தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் அவர்கள் சுட்டபோது காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டி குண்டுகள் பாய்ந்து இறந்தார்.
வழக்கின் விசாரணைக்காக போன இடத்தில் தனி வழக்காகவே மாறிப் போய்விட்டார் பெரிய பாண்டி.
அஞ்சலி வார்த்தைகளுக்கு நடுவில் பெரிய பாண்டியின் குடும்ப நிலையை காப்பாற்ற வேண்டும் என்றும் குரல்கள் எழுந்தன. இதையடுத்து தமிழக முதல்வர் கொலையுண்ட ஆய்வாளரின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும், அவரது மகன்களின் படிப்புச்செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் ராஜஸ்தான் போலீஸ் அதீத ஆத்திரத்துடன் இந்த வழக்கில் கொள்ளையர்களுக்கு எதிராக இறங்கியிருக்கிறது. ஜெய்த்ரான் போலீஸின் கட்டுப்பாட்டுக்குள் இந்த கொலையின் முக்கிய குற்றவாளியான நாதுராமின் உறவினர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
மொத்தம் 9 பேரில் 7 பேர் ஆண்கள் இருவர் பெண்கள். இந்த பெண்களும் நாதுராமுடன் இணைந்து தமிழக போலீஸாரை தாக்கினார்கள் என்று விசாரணையில் தெரிந்திருக்கிறதாம். இந்நிலையில் கொலையாளிகள் என நாத்துராம் மற்றும் தினேஷ் செளத்திரி இருவரின் புகைப்படங்களையும் தமிழக காவல்துறை வெளியிட்டிருக்கிறது.
முக்கிய கொலையாளி நாத்துராமின் வயது 25, அப்பா பெயர் சென்னாராம். தினேஷ் செளத்திரியின் வயது 17, அப்பா பெயர் காராராம் என்றிருக்கிறது.
கொள்ளையர்களாக இருந்து போலீஸ் அதிகாரியையே கொலை செய்த கொலையாளிகளாக மாறியிருக்கும் இந்த விடலை மற்றும் குரூர இளைஞர் இருவரும் விரைவில் பிடிபடட்டும். ராஜஸ்தானின் பெயரைக் கெடுத்தவர்கள் இவர்கள்.