தமிழ்நாட்டில் 575 சார் பதிவாளர் அலுவலகங்களின் மூலமாக வருடத்துக்கு 25 லட்சம் பத்திரங்கள் பதிவாகிறது. இதன் மூலமாக அரசுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. 

கடந்த நிதி ஆண்டில் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்தது. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் ஜனவரி மாதம் இறுதி வரையிலான காலத்தில் 10 ஆயிரத்து 785 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. இதையடுத்து மீதமுள்ள 4,215 கோடி ரூபாயை அடுத்த மாதத்திற்குள் வசூலிக்கும் நடவடிக்கைகளில் பதிவுத்துறை ஈடுபட்டுள்ளது. 

இதனிடையில் ஜி.எஸ்.டி., ஆகிய காரணங்களால் பிற வழிகளில் வரி உயர்வுக்கு வாய்ப்பு இல்லை. இதன் காரணமாக பத்திரப்பதிவு துறை வருவாயை மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது, தற்போதைய நிலவரப்படி சொத்து விற்பனை பதிவில், 7 சதவீதம் முத்திரை தீர்வை, 4 சதவீதம் பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது இந்தியாவிலேயே மிக அதிகபட்ச கட்டணம் என்பதால் இதை உயர்த்த வாய்ப்பில்லை. அதிக மதிப்புள்ள சொத்துக்களின் செட்டில்மென்ட் பத்திரங்களுக்கும், குறிப்பிட்ட சதவீதம் கட்டணம் விதிக்கலாம்.சொத்து மதிப்பில் குறைந்தபட்சம், 1 அல்லது 2 சதவீதம் கட்டணம் நிர்ணயித்தாலும், பெரிய அளவில் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான ஆலோசனை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.