தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை ஒரே நாளில் மிகப்பெரும் வசூலிட்டி புதிய சாதனை படைத்துள்ளது. அரசுக்கு வருமானம் ஈட்டித் தருவதில் பத்திரப்பதிவு துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
பத்திரப்பதிவு அலுவலகங்கள்
தமிழ்நாட்டில் சொத்துகளை வாங்குபவர்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சுமார் 582 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு நாளுக்கு நாள் பத்திரப் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசுக்கு வருமானம் கொட்டுகிறது. கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் 25 லட்சம் பேர் பத்திர பதிவு செய்துள்ளனர்.
இந்த பத்திர பதிவு மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.15,582 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக பத்திரப்பதிவு துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதாவது ஒரு சொத்தினை பத்திரப்பதிவு செய்வதற்கு சந்தை மதிப்பு மற்றும் பதிவு கட்டணம் என மொத்தம் 9% வசூலிக்கப்படுகிறது. இதில் 7 சதவீதம் அரசின் கஜானாவிற்கு வந்து விடுவதால் தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் பத்திரப்பதிவுத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
ஞாயிற்றுக்கிழமையும் இயங்கின
முகூர்த்த நாட்களிலும் அதிக அளவு பத்திரப்பதிவு நடைபெறும் என்பதால் அந்த நாட்களில் அதிக அளவிலான டோக்கன் வழங்கபப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமையும் தமிழ்நாடு அரசு உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கின. இதனால் சில பத்திரப்பதிவு அலுவலகங்கள் சாதாரண நாட்களை போன்று பிஸியாக காணப்பட்டது.
இந்நிலையில், பத்திரப்பதிவுத்துறை தொடர்ந்து வசூல் மழை பொழிந்து வரும் நிலையில், கடந்த மாதம் ஜனவரி 31ம் தேதி மட்டும் ஒரே நாளில் 231 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த நிதியாண்டில் பத்திரப்பதிவுத்துறையின் இரண்டாவது அதிகபட்ச வருவாய் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் வசூல் மழை
இது தொடர்பாக பத்திரபபதிவு துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''2024-25ம் நிதியாண்டில் கடந்த 05.12.2024 அன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15/- கோடி வருவாய் பதிவுத்துறையில் ஈட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 31.1.2025 அன்று 23,061 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, இதே நிதியாண்டில் இரண்டாவது முறையாக அரசுக்கு ரூ.231.51/- கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக முன்பதிவு வில்லைகள்
மேலும் ''மங்களகரமான நாளான 03.02.2025 (இன்று) அன்று அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று மங்களகரமான நாளான 03.02.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்குபதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டிருந்தது'' எனவும் கூறப்பட்டுள்ளது.
ஊழியர்கள் எதிர்ப்பு
நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு இருந்தாலும், பல்வேறு மாவட்டங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கவில்லை; பூட்டியே கிடந்தன. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஏனெனில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வேலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் அதிகரிகள் பணிக்கு வரவில்லை. இது தொடர்பாக துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
