எப்போது பார்த்தாலும் சனாதனத்தை நான் ஒழிப்பேன். நானும் கிறிஸ்தவன் தான். இந்து மதம் வேற்றுமையை விதைக்கிறது என்று உதயநிதி உளறிக் கொண்டிருக்கிறார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றார். தேவாலயத்தில் நடந்த கூட்டு திருப்பலியில் பங்கேற்று பிரார்த்தனை செய்தார். பிரதமர் மோடி தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யும் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், பிரதமர் மோடி சர்ச்சுக்கு சென்று விட்டார். முதல்வர் ஸ்டாலின் எப்போது இந்து கோயிலுக்கு செல்வார் என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
உதயநிதி உளறல்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ''எப்போது பார்த்தாலும் சனாதனத்தை நான் ஒழிப்பேன். நானும் கிறிஸ்தவன் தான். இந்து மதம் வேற்றுமையை விதைக்கிறது என்று உதயநிதி உளறிக் கொண்டிருக்கிறார். உதயநிதி நீங்கள் துணை முதல்வர். அனைவருக்கும் பொதுவாகத்தான் இருக்க வேண்டும். நாங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறோம். ஆனால் எங்கள் மீது வீண்பழி சுமத்துகிறார்கள்.
ஸ்டாலின் எப்போது கோயிலுக்கு செல்வார்?
தமிழக கலாசாரத்தை யாரெல்லாம் பின்பற்றுகிறார்களோ அவர்களை சங்கிகள் என்று முத்திரை குத்துவார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையான இன்று பிரதமர் மோடி தேவாலயம் சென்றார். இதேபோல் முதல்வர் ஸ்டாலின் இந்து பண்டிகைக்கு கோயிலுக்கு செல்வாரா? உண்மையான மதசார்பற்ற கட்சி என்றால் அது பாஜக தான். திமுக தான் மதசார்புள்ள கட்சியாக உள்ளது'' என்றார்.
விஜய்க்கு தமிழிசை அட்வைஸ்
தொடந்து விஜய் குறித்து பேசிய தமிழிசை, ''எங்களது தேசிய ஜனநாயக கூட்டணி பலமுடன் உள்ளது. நீங்கள் தனியாக நின்று ஒன்றும் செய்ய முடியாது என்பதைத் தான் நான் மீண்டும் தம்பி விஜய்யிடம் சொல்கிறேன். எல்லோரும் இணைந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும். ஆகையால் வீணாக போய் விடாதீர்கள். நாம் எல்லோரும் சேர்ந்து திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம். திமுகவை வீழ்த்த எல்லோரும் ஒன்று சேர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக, பாஜக கூட்டணி ஏற்கெனவே பலமாக உள்ளது. அவர்கள் வந்தால் கூடுதல் பமாக இருக்கும்'' என்று தெரிவித்தார்.


