தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று மாலை மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது

தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள அவருக்கு தொடர்புடைய 9 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது. அமைச்சர் பொன்முடியின் மகனும், எம்.பி.யுமான கவுதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். செம்மண் குவாரி தொடர்பாக, அமைச்சர் பொன்முடி மீது 2012ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சோதனை நடைபெற்றதாக தெரிகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சென்னை சைதாப்பேட்டை, விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகள், விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் நடைபெற்ற சோதனையின் முடிவில், அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், இன்று காலை 3 மணியளவில் அவரை விடுவித்தனர்.

உயர்கல்வித்துறைமைச்சர் இன்றி நடைபெறும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

இந்த சோதனையின்போது, ரூ.10 லட்சம் மதிப்பிலான அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் ரூ.70 லட்சம் மதிப்பிலான இந்திய ரூபாய் உள்பட மொத்தம் ரூ.80 லட்சத்தை அமலாக்கத் துறையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோர் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து திமுக வழக்கறிஞர் சரவணன் கூறுகையில், “விசாரணை நடத்துவதாக அமலாக்கத்துறை மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டது. அவர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. அமலாக்கத்துறையினரின் கேள்விகளுக்கு, அமைச்சர் பொறுமையாக பதிலளித்தார். ஆளுநரை தொடர்ந்து எதிர்த்து வந்ததால், அமைச்சர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 72 வயதான ஒருவரை நள்ளிரவில் விசாரித்தது மனித உரிமை மீறல். இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராகும்படி அமைச்சருக்கும், அவரது மகனுக்கும் சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது.” என்றார்.