தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் ரூ.1.5 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது
MBBS Admission 2025: Tamil Nadu Hikes Fees for Management & NRI Quota : பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் என்ன ஆகப்போகிறாய் என கேட்டால் அதில் பெரும்பாலான மாணவர்கள் டாக்டராக போறேன் என்று தான் கூறுவார்கள். ஆனால் பள்ளி இறுதி ஆண்டில் எடுக்கும் மதிப்பெண்களை பொறுத்து மாணவர்களின் ஆசை மாறுபடும். அப்படியே 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தால் நீட் தேர்வில் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே மருத்து படிப்பில் சேர முடியும். இவ்வளவு கஷடப்பட்டு நீட் தேர்வில் மதிப்பெண் எடுத்தாலும் அரசு ஒதுக்கீடு போக தனியார் மருத்துவ கல்லூரியில் பல லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மாணவர்களுக்கு மேலும் ஷாக் கொடுக்கும் வகையில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணமானது லட்சங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான மேனேஜ்மெண்ட் மற்றும் NRT கோட்டா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவப் படிப்புகளுக்காக (MBBS மற்றும் BDS) இந்தாண்டு 11,850 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இவை அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படுகின்றன. சுமார் 6,630 இடங்கள் (அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில்) உள்ளது. இதில் 15% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படுகின்றன. மீதுமுள்ள 85% இடங்கள் தமிழ்நாடு அரசால் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதில் தமிழக அரசு அமல்படுத்தியுள்ள 7.5% இடங்கள் மூலம் 496 மருத்துவ படிப்பு இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தனியார் மருத்துவ கல்லூரி கட்டணம் திடீர் உயர்வு
தமிழ்நாட்டில் 22 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன, இவை MBBS படிப்புக்கு சுமார் 3,300 இடங்களை வழங்குகின்றன. கல்விக் கட்டணமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.85 லட்சம் முதல் ரூ.4.15 லட்சம் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் 2025-26 கல்வியாண்டிற்கான தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ் கல்விக் கட்டணம் உயர்ந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீதிபதி. ஆர். பொங்கியப்பன் தலைமையிலான குழு புதிய கட்டண வரம்பை நிர்ணயித்துள்ளது. 21 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டண ரூ.4.34 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் ரூ.13.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்ந்துள்ளது, அதாவது ரூ.1.5 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கான இடங்களுக்கு தற்போது ரூ.2.50 லட்சம் உயர்த்தப்பட்டு ரூ.27,00,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வானது 2025 முதல் 2028 கல்வி ஆண்டு வரை கடைப்படிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
