இவர் ராஜ்குமார்… 32 வயதான இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார். தனது வேலைகளில் மும்மமுரமாக இருக்கும் இவர் 45 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு தற்போது தான் திரும்ப வந்து வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்றார் என்பதற்காக கடந்த ஜுன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார். இவர் மீது 133 வழக்குகள் போடப்பட்டுள்ளதுதான் போலீஸ் செய்துள்ள மிகப் பெரிய சாதனை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதில் என்ன சாதனை என்று நினைக்கிறீர்களா ? இவர் மீது போடப்பட்டுள்ள இந்த 133 வழக்குகளும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினார் என்பது தான். சரி 133 பொதுச் சொத்துக்களை சேதப்படுத்த முடியாதா என நீங்கள் கேள்வி கேட்கலாம்? கண்டிப்பாக இது சாத்தியமில்லை. ஏனென்றால், ஒரே நேரத்தில், குறிப்பிட்ட ஒரு மணி நேரத்தில், வெவ்வேறு இடங்களில் உள்ள வெவ்வேறு சொத்துக்களை இவர் சேதப்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது ஒரு அப்பட்டமான பொய் வழக்கு என்பது சாதாரண பாமரனுக்க கூட தெரியும்.

மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, தனித்தனியாக போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த போராட்டத்தின்போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், போராட்டக்கார்கள் சட்டத்தை மீறி செயல்பட்டார்கள் என ஒவவொருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் வெவ்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று முருகேசன் நகரைச் சேர்ந்த அருண் என்பவர் மீது 72 வழக்குகள் போடப்பட்டுள்ளன. 38 மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்ப்ட்டுள்ளது. அவர் மீது போடப்பட்டுள்ள எஃப்ஐஆரில் சரியாக 1 மணிக்கு அவர் தீ வைத்தாக தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த 72 வழக்குகளில் அவர் வெவேறு இடங்களில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குமரரெட்டிபுரம் இஸ்ரேல் என்பவர் மீதும் 46 வழக்குகள் இதே போல் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜிம்ராஜ் மில்டன் என்பவர், இந்த போராட்டக்காரர்களுக்காக இலவச சட்ட உதவிகளை செய்து வருகிறார். கிட்டத்தட்ட 200 பேர் மீது இது போன்ற வழக்குகள் போடப்பட்டுள்ளன.பாத்திமா பாபு என்ற 65 வயது பெண்மணி மீது 6 வழக்குக்ள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 7 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவர் ஜுன் 16 ஆம் தேதி கைது செய்யப்பட்டு 16 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் கைது செய்யப்பட்டதை போலீஸ் கணக்கிலே காட்டவிலலை. அதன்பிறகு வாஞ்சிநாதனின் மனைவி habeas corpus petition போட்டு அவரை மீட்டு வந்தார். தற்போது அவர் கண்டிஷன் பெயிலில் மதுரையில் தங்கியுள்ளார். தற்போது அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை போராட்டக்காரர்கள் வழக்கை எதிர்கொள்ள எளிதாக இருக்கும் என சொல்கிறார் 133 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள ராஜ்குமார். ராஜ்குமார் மீது முதலில் 60 வழக்குள் மட்டுமே போடப்பட்டிருந்தது, பின்னா அதனுடன் 70 வழக்குகள் சேர்க்கப்பட்டன. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் ராஜ்குமாரின் தம்பி மீது 93 வழக்குகள் பதவி செய்யப்பட்டுள்ளன.

ராஜ்குமார் வசிக்கு தெற்கு வீரபாண்டிய புரத்தில் ஒவ்வொரு வாரமும் ஸ்டெர்லைட் ஆலையின் வேன் ஒன்று டாக்டர் மற்றும் நர்ஸ்களுடன் வந்து பொது மக்களுக்கு வைத்தியம் பார்த்து செல்வார்கள். நோயையும் பரப்பிவிட்டு அதற்கு மருத்துவமும் பார்க்கும் அந்த ஆலையை எப்படி அனுமதிப்பது ? என்கின்றார் ராஜ்குமார்.

பொய் வழக்குளை போட்டு தூத்துக்குடி பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை குலைக்கும் முயற்சியில் வேதாந்தா நிறுவனமும், தமிழக அரசும் தொர்ந்து முயற்சி செய்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த ரேஸில் ஜெயிக்கப் போகிறவர்கள் வேதாந்த நிறுவனமா ? அல்லது அந்த மண்ணிம் மக்களா என்பது போகப் போக தெரியும்.