tamil nadu govt order
அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறை செய்யும் திட்டத்துக்கான கால அளவு ஓராண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த ஆண்டு மே 3-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
.குறைவான விலையில் மனைகளை வாங்க வேண்டும் என்பதற்காக அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளில் உள்ள மனைகளை பொது மக்கள் வாங்கியுள்ளனர். இந்த மனைகளை வரன்முறைப்படுத்த ஒரு புதிய திட்டம் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை பொது மக்களும், பல்வேறு அமைப்புகளும் தெரிவித்தன. இதைனையடுத்து நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் , மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம் அடுத்த ஆண்டு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
விற்கப்பட்ட மனைகளின் அடிப்படையில் மனைப்பிரிவுகளை 3 வகைகளாகப் பிரித்து வரன்முறைபடுத்தும் முறை நீக்கப்பட்டுள்ளது. இதனால் அனுமதியின்றி பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுகள் உள்ளது உள்ளபடியே வரன்முறை செய்யப்படும். ஒரு மனைப் பிரிவில் குறைந்தப்பட்சம் ஒரு மனை விற்கப் பட்டிருந்தால் அந்த மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தப்படும். மேலும், மனைப்பிரிவில் அமைந்துள்ள சாலைகள் ‘உள்ளது உள்ளபடி’ நிலையில் வரன்முறைப்படுத்தப்படும்.

மனைப்பிரிவு மேம்பாட்டாளர்கள் தங்கள் மனைப்பிரிவில் வரன்முறைப்படுத்தக் கோரும் விற்கப்படாத மனைகளின் பரப்பளவில் 10 சதவீத நிலத்தை ஓ.எஸ்.ஆருக்காக ஒதுக்கி உள்ளாட்சிக்கு தானமாக வழங்க வேண்டும். ஓ.எஸ்.ஆர். எத்தகைய அளவில் இருப்பினும், விதிகளில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனி நபர்களால் வாங்கப்பட்ட மனையை வரன்முறைப்படுத்தும் போது ஓ.எஸ்.ஆர். விதிகளிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.
சென்னைப் பெருநகரப் பகுதியில் 5.8.1975 முதல் 20.10.2016 வரையிலும், சென்னைப் பெருநகரப் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள ஊரகப் பகுதிகளில் 29.11.1972 முதல் 20.10.2016 வரையிலும், சென்னைப் பெருநகரப் பகுதிக்கு வெளியே நகரப் பகுதிகளில் 1.1.1980 முதல் 20.10.2016 வரையிலும் ஏற்படுத்தப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனை உட்பிரிவுகளில் அமைந்துள்ள மனைகளை வரன்முறைப்படுத்த இத்திட்டம் பொருந்தும்.
மேலே கூறப்பட்டுள்ள தேதிகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட அனைத்து அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகள் வரன்முறைப்படுத்தப்பட்டதாகக் கருதப்படும். இதற்கு வளர்ச்சிக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
