பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு..! தமிழகத்தின் அனைத்து வாகனங்களுக்கும் வரி உயர்வு - எவ்வளவு தெரியுமா.?
சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களுக்கும் வரியை உயர்த்தி தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு வரிகள் விதிகப்பட்டு வரும் நிலையில், தற்போது அனைத்து வாகனங்களுக்கும் வரியை உயர்த்தி பொதுமக்களுக்கு தமிழக அரசு ஷாக் கொடுத்துள்ளது. அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டுக்குப் பிறகு வாகனங்களுக்கான வரிகளை அரசு உயர்த்தவில்லை. தற்போது வாகனங்களின் மீது விதிக்கப்படும் வரிகளில் இருந்து பெறப்படும் வருமானம் குறைவாக உள்ளது. இதனால் அரசுக்கு குறைவான வருவாய்தான் கிடைப்பதாக கூறப்படுகிறது இதனையடுத்து மாநிலத்தின் நிதிவளத்தை உயர்த்துவதற்காக தமிழ்நாடு இயக்கூர்திகள் வரி விதிப்புச் சட்டத்தில், நடைமுறையில் உள்ள வரிவிதிப்பு முறைகளை திருத்தம் செய்வதென அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய 2 சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்திற்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், 'கேப்'கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரியை நிர்ணயிக்கப்படுகிறது. புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாத நிலையில் அதன் விலையில் 10 சதவீதம்; ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் என்றால் 12 சதவீதம் என நிர்ணயிக்கப்படுகிறது.
பழைய மோட்டார் சைக்கிள்களில் ஒரு ஆண்டு பழையதாக உள்ளவற்றுக்கு 8.25 சதவீதம் (ஒரு லட்சம் ரூபாய்க்கு உட்பட்டவை) மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டவற்றுக்கு 10.25 சதவீதம்; 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் பழையதாக உள்ளதற்கு (ஒரு லட்சம் ரூபாய்க்கு உட்பட்டவை) 8 சதவீதம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டவற்றுக்கு 10 சதவீதம் என வாழ்நாள் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு ஆண்டு முதல் 11 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, அதன் விலையில் 8 சதவீதம் முதல் 18.75 சதவீதம் வரை நிர்ணயிக்கப்படுறது. மேலும் 15 ஆண்டுகள் நிறைவடையாத மோட்டார் சைக்கிள்களுக்கு 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750; மற்ற மோட்டார் வாகனங்களுக்கு ரூ.1,500 என நிர்ணயிக்கப்படுகிறது. புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி, மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்களுக்கு ரூ.2,250, மற்ற வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம் என நிர்ணயிக்கப்படுகிறது.
சரக்கு வாகனங்களில், சரக்கு ஏற்றிய பிறகு 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ.3,600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல 3 ஆயிரம் கிலோ - 5,500 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு காலாண்டு வரியாக ரூ.1,425, முதல் ரூ.3,100 வரை எடைக்கு ஏற்ப வரி உயர்த்தப்பட்டுள்ளது. வாடகைக்கு இயக்கப்படும். பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில், சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கான (ஓட்டுனர் மற்றும் நடத்துனர் நீங்கலாக 35 பேர்கள் பயணிக்கும் கொள்ளளவு கொண்ட வாகனம்) காலாண்டு வரி ரூ.4,900; 35 பேர்களுக்கும் அதிகமானோர் பயணிக்கும் வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம், படுக்கையுடன் கூடிய ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை வரி உயர்த்தப்படுகிறது.
இழுவை வண்டிகளுக்கு (டிரெய்லர்) ஏற்றப்படும் எடையின் கொள்ளளவுக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.1,800 வரை வரி உயர்த்தப்படுகிறது. சென்னை மற்றும் மதுரை, கோவை நகர சுற்றுப் பகுதிகளில் பிரத்யேகமாக இயக்க அனுமதிக்கப்பட்ட பஸ்களுக்கு மேல்வரி விதிக்கப்படுகிறது. எடையேற்றப்பட்ட நிலையில் 600 கிலோவுக்கு மிகாத, 50 சிசி உள்ள வாகனங்களுக்கு ஆண்டு வரி ரூ.135 முதல் ரூ.240 வரை அவற்றின் சி.சி.க்கு ஏற்ப ஆண்டு வரி விதிக்கப்படுகிறது. பயணிகள் போக்குவரத்து மற்றும் வாடகைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு (ஓட்டுனர் அடங்கலாக 4 பேர் பயணிக்கும் வாகனங்கள்) 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6 ஆயிரம் வரை பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வரி உயர்த்தப்படுகிறது.
கட்டுமான தளவாட வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ. 15 ஆயிரம்; மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் போக்குவரத்திற்கான கல்வி நிறுவன பஸ்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.45; பணியாளர்களின் போக்குவரத்திற்கான பிற நிறுவனங்களின் வாகனங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.100 என்ற வீதத்தில் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது என அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.