tamil fisehermen imorisonment by andra fishermen

ஆந்திர கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடித்ததாக கூறி சென்னை, காசிமேடு பகுதியை சேர்ந்த 140 மீனவர்களை அம்மாநில மீனவர்கள் சிறைப்பிடித்து வைத்துள்ளனர்.

சென்னை, காசிமேடு பகுதியிலிருந்து, 200 க்கும் மேற்பட்டோர் 140 படகுகளில் கடந்த செவ்வாய் கிழமை ஆந்திர கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

ஆந்திர மாநிலத்தின் ஆழ்கடல் பகுதியான கொல்லமேடு பகுதியில் காசிமேடு மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆந்திர மீனவர்கள் , தங்கள் எல்லைப்பகுதிக்குள் வந்து ஏன் மீன் பிடிக்கிறீர்கள் ? என தகராறு செய்துள்ளனர்.

பின்னர் காசிமேடு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் ஆந்திர மீனவர்கள் சிறைப்பிடித்து சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மீனவர்களை மீட்க காசி மேடு விசைப் படகு உரிமையாளர்கள் பேச்சு வார்த்தை நடத்த இன்று ஆந்திரா செல்கின்றனர்.

மேலும் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களின் விசைப் படகுகளை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் காசிமேடு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பும் இதே போல 300 தமிழக மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறைப்பிடித்தனர். பக்கத்து மாநில மீனவர்களே தமிழக மீனவர்களை சிறைப் பிடித்து வைப்பது இரு மாநிலங்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.