மணல் திருட்டைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு…
தஞ்சாவூர்
மணல் திருட்டைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ஐயம்பேட்டை பேரூராட்சி பசுபதிகோவில் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், “பசுபதிகோவில் குடமுருட்டி ஆறிறிலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுகின்றன. அவை குறிப்பிட்ட இடங்களில் சேகரித்து வைக்கப்பட்டு இரவு நேரங்களில் லாரிகளில் ஏற்றப்பட்டு வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
எனவே மணல் திருட்டைத் தடுக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் இது தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், பாபநாசம் வட்டாட்சியர் க.ராணி, தலைமையில் வருவாய் அதிகாரி அசோக்குமார் உள்ளிட்டோர் பசுபதிகோவில் குடமுருட்டி ஆற்றில் மணல் அள்ள வரும் வாகனங்களைத் தடுக்கும் வகையில் இயந்திரத்தை கொண்டு பெரிய பள்ளம் தோண்டி தடைகள் அமைத்தனர். இதன் மூலம் லாரி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவது தடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.