மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் ஸ்வைப் மெஷின்…
மதுரை,
பணத்தட்டுப்பாட்டை போக்க மக்கள் அதிக அளவில் கூடும் பொது இடங்களில் ஸ்வைப் மெஷின் வைக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
கடந்த மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்ததைத் தொடர்ந்து ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.
புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அதிக அளவில் அச்சிடப்பட்டு புழக்கத்தில் உள்ளது. புதிய 500 ரூபாய் நோட்டு இருக்கும் இடம் தெரியவில்லை.
இந்த நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை கொடுக்க முடியாமல் வணிகர்களும், பொதுமக்களும் பெரும் துயரத்தை அனுபவிக்கின்றனனர்.
கடைகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தபால் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிக அளவில் கூடும் பல்வேறு இடங்களிலும் இதே போன்ற சிரமத்தையே பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர்.
மேலும், வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் போதிய பணம் இருப்பில் இல்லை என்று அரசு தரப்பில் இருந்தும் கைவிரிக்கின்றனர்.
இதனால் பணம் இருக்கும் ஒரு சில வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கும் நிலையும், அதனால் நோயாளிகள் மற்றும் முதியோர் பலர் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. வங்கி வாசலில் வரிசையில் நின்று 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இதனை மத்திய அரசோ, மோடியோ கருத்தில் கொள்ளாமல் இருக்கின்றனர்.
எனவே, இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இரயில் நிலையங்கள், கோவில்கள், டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் ‘ஸ்வைப்’ எந்திரம் வைக்க உத்தரவிட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.