Surrounded by residential areas floods!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 9 நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், மழை வெள்ளம் காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கின.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் கிராமத்தில் 527 ஏக்கர் நிலப்பரபில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரி நீரானது, இப்பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிரிடுவதற்கு நீராதாரமாக விளங்கி வருகிறது.
தற்போது, வடகிழக்கு பருவமழை கடந்த 9 தினங்களுக்கு மேலாக பெய்து வருவதால், இந்த ஏரியின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த நிலையில், இன்று காலை ஏரியின் மதகு அருகே திடீரென உடைப்பு ஏற்பட்டது. உடைப்பின் வழியாக வெளியேறிய வெள்ள நீரானது, அருகே இருந்த வயல்களில் பாய்ந்தது.

இதனால், வயல்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. மேலும், வேட்டைக்காரமேடு பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பொதுப்பணி துறை, ஏரியில் ஏற்பட்ட உடைப்பு நாசவேலை காரணமாக நிகழ்ந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
ஏரியில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை பொதுப்பணித்துறை மற்றும் ஊர்மக்கள் அடைத்து வருகின்றனர்.
