அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை!
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தவுள்ளது

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 9ஆவது முறையாக நவம்பர் மாதம் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இரு முறை அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு கடந்த 19ஆம் தேதி அவரது தரப்பில் கோரப்பட்டது. ஆனால், ஏற்கனவே பட்டியலிடப்பட்ட வழக்குகள் இருப்பதால், அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
தமிழக அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் பாஜக கேவியட் மனு!
உச்ச நீதிமன்றத்தில் விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரும் மேல்முறையீட்டு மனு, அக்டோவர் 30ஆம் தேதி (இன்று) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தவுள்ளது.