விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு உண்டு; ஆனால், வணிகர்கள் சங்கம் பங்கேற்காது – விக்கிரமராஜா திட்டவட்டம்…
தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வருகிற திங்கட்கிழமை நடக்க இருக்கும் கடையடைப்பு போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், ஆனால், வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு இதில் பங்கேற்காது என்றும் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா திட்டவட்டமாக தெரிவித்தார்.
விழுப்புரத்தில், தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநில மாநாடு மே மாதம் 5–ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த மாநாடு தொடர்பாக வணிகர்களின் ஆதரவை திரட்ட வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தமிழகம் முழுவதும் சென்று சங்க நிர்வாகிகளை சந்தித்துப் பேசி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, அவர் நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பண்ருட்டிக்கு வந்த விக்கிரமராஜாவுக்கு கடலூர் மண்டல தலைவர் சண்முகம், கடலூர் மாவட்ட செயலாளர் வீரப்பன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர், அவர் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். இதனை தொடர்ந்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அந்த பேட்டியில், “விழுப்புரத்தில் நடைபெற உள்ள மாநாட்டில் 10 இலட்சம் வணிகர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
மத்திய அரசின் பல்வேறு சட்ட குளறுபடிகளால் வணிகர்கள் சிக்கி தவிக்கின்றனர்.
வணிகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கணக்கு காட்டி வருவதை ஜி.எஸ்.டி. மசோதாவால் ஓராண்டில் மூன்று முறை கணக்கு காட்ட வேண்டும் என்பது சாமானிய நடுத்தர வியாபாரிகளால் முடியாதது.
ஆன்லைன் வர்த்தகத்தால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 5 இலட்சம் வியாபாரிகள் காணாமல் போய்விட்டனர்.
மாநில அரசின் வணிக நலவாரியம் செயல்படாமல் உள்ளது. வணிகவரி அதிகாரிகள் ஏவல் படையாக செயல்பட்டு வருகின்றனர்.
வணிகர்கள் பாதிக்கப்பட்டதுபோல விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 3-ஆம் தேதி (திங்கட்கிழமை) நடத்தப்படும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு முழு ஆதரவு அளிக்கும்.
ஆனால், அன்றைய தினம் கடையடைப்பு செய்வது என்பது எங்களால் முடியாது. வணிகர்கள் மார்ச் மாத கணக்கை முடிக்க வேண்டியுள்ளது. எனவே, ஏப்ரல் 3–ஆம் தேதி கடையடைப்பு போராட்டத்தில் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு பங்கேற்காது” என்று அவர் பேட்டியளித்தார்.