ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும்... ஆனால்... மா.சுப்பிரமணியன் சொல்வது என்ன?
கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தினமும் கூடுதலாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 6 ஆம் தேதி முதல் வருகிற 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராசர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2 வாரமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களும் சிறப்பாக ஒத்துழைப்பு தருகிறார்கள். தமிழக முதலமைச்சர் எடுக்கும் ஊரடங்கு முடிவுகளுக்கு நல்ல வரவேற்பை மக்கள் தருகிறார்கள்.
ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளை மக்கள் மதிக்க வேண்டும். வெளியே செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். சென்னையில் மட்டும் நேற்று 6000க்கும் மேற்பட்ட கேஸ்கள் வந்துள்ளது. இது முந்தைய நாட்களை விட குறைவான கேஸ்கள் ஆகும். சென்னை மட்டுமின்றி இந்தியாவில் பெருநகரங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனா தொற்றின் எண்ணிக்கையை பொறுத்து வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்குமா என்று முடிவுகள் எடுக்கப்படும். வரும் வாரங்களில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும். இந்தியாவில் பெருநகரங்களில் தொற்று எண்ணிக்கை குறைவது ஆறுதல் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.