தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ மிஸ் வேர்ல்ட் 2025 பட்டத்தை வென்றுள்ளார். எத்தியோப்பியா மற்றும் போலந்து அழகிகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர். இந்தியாவைச் சேர்ந்த நந்தினி குப்தா டாப் 8 இடங்களுக்குள் நுழையவில்லை.

2025 உலக அழகிப் போட்டியில் (Miss World 2025) தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ (Opal Suchata Chuangsri) பட்டம் வென்றுள்ளார். ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ, கடந்த ஏப்ரல் 22 அன்று 'மிஸ் வேர்ல்ட் தாய்லாந்து 2025' பட்டத்தை வென்றிருந்தார்.

எத்தியோபியா அழகி முதல் ரன்னர்-அப் ஆகவும், போலந்து அழகி மூன்றாவது இடத்திலும், மார்டினிக் அழகி நான்காவது இடத்திலும் வந்துள்ளனர்.

ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீயின் வயது மற்றும் பின்னணி:

2003 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி தாய்லாந்தின் துடிப்பான கடற்கரை நகரமான ஃபூகெட்டில் பிறந்த ஓபல், ஹோட்டல் உரிமையாளர்களின் மகளாகப் பிறந்தார். தாய், ஆங்கிலம் மற்றும் சீனம் என மூன்று மொழிகளில் பேசுபவர்.

ஓபலின் கல்விப் பயணம் பாங்காக்கில் உள்ள புகழ்பெற்ற ட்ரைம் உடோம் சுக்ஸா பள்ளியில் தொடங்கியது. அங்கு அவர் சீன மொழி கற்றார். அப்போது மொழிகள் மற்றும் சர்வதேச கலாச்சாரத்தின் மீதான தனது ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். தற்போது, அவர் தம்மசாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படித்து வருகிறார்.

தனது கல்வி மற்றும் மொழியியல் திறமைகளைத் தாண்டி, ஓபல் சமூகப் பணிகளிலும் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளார். 16 வயதில் தீங்கற்ற மார்பகக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பின் அவர் மார்பக ஆரோக்கிய விழிப்புணர்வு மற்றும் புற்றுநோயை ஆரம்பகாலத்திலேயே கண்டறிதலில் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த "ஓபல் ஃபார் ஹர்" (Opal For Her) பிரச்சாரத்தைத் தொடங்கினார். இந்த முன்முயற்சி பெண்களின் ஆரோக்கியம் மற்றும் மேம்பாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

மிஸ் வேர்ல்ட் 2025 இல் இந்தியா:

ஹைதராபாத்தில் நடைபெற்ற மிஸ் வேர்ல்ட் 2025 போட்டியில் இந்தியாவின் நந்தினி குப்தா டாப் 8 இடங்களுக்குள் நுழையத் தவறிவிட்டார். தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய போதிலும், 21 வயதான நந்தினி குப்தா, அதிகாரப்பூர்வ மிஸ் வேர்ல்ட் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.

ராஜஸ்தானின் கோட்டா அருகே உள்ள கைதூண் என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த நந்தினி குப்தா, நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். மிஸ் ராஜஸ்தான் பட்டத்தை வென்ற பிறகு, அவர் மிஸ் இந்தியா 2023 ஆகப் பட்டம் சூட்டப்பட்டார்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த அழகி:

ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த நந்தினி குப்தாவின் பயணம் பலருக்கும் உத்வேகம் அளித்துள்ளது.

72வது மிஸ் வேர்ல்ட் போட்டி இந்த மாத தொடக்கத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியது. இது இந்தியாவுக்கும், போட்டிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும். கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற 71வது பதிப்பில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பைஸ்கோவா மிஸ் வேர்ல்டாகப் பட்டஞ் சூட்டப்பட்டார். அவர் இன்று தனது மதிப்புமிக்க மகுடத்தை தனது வாரிசுக்கு வழங்குவார்.