ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு விநாயகர் சதுர்த்தி விடுமுறையை மாற்றுக: சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு விநாயகர் சதுர்த்தி விடுமுறையை மாற்ற வலியுறுத்தி சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம் எழுதியுள்ளார்

நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு, பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மத்திய, மாநில அரசுகள் பொது விடுமுறை அறிவித்துள்ளன.
ஆனால், இந்த விடுமுறை தேதிகளில் சிக்கல் நிலவி வருகிறது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு விநாயகர் சதுர்த்தி பொது விடுமுறை வருகிற 19ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டு அரசு விநாயகர் சதுர்த்திக்கு வருகிற 18ஆம் தேதி பொது விடுமுறை என அறிவித்துள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு தேதிகளின் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதே இதற்கு காரணம்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு விநாயகர் சதுர்த்தி விடுமுறையை மாற்ற வேண்டும் என மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஒன்றிய உள்துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு செப்டம்பர் 18ஆம் தேதி விடுமுறை. ஆனால் தமிழ்நாட்டில் பணி புரியும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி விடுமுறை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வழிபாட்டு பன்முகத் தன்மையைக் கணக்கிற்கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு ஊழியர்களுக்கும் செப்டம்பர் 18ஆம் தேதியன்றே விடுமுறை அளிக்க வேண்டுமென்றும் அக்கடிதத்தில் அவர் கோரியுள்ளார்.
முன்னதாக, தமிழக அரசின் சார்பில் கடந்தாண்டு இறுதியில், இந்த ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டது. அதில், செப்டம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சதுர்த்தி திதியானது செப்டம்பர் 18ஆம் தேதி வருவதாக குறிப்பிட்டு, அன்றைய தினத்துக்கு விடுமுறையை மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறை நாளை செப்டம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது என்பது கவனித்தக்கது.
தமிழ்நாட்டு மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!