கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மாணவர்கள் 2-வது நாளாக சாலை மறியல்...
ஈரோடு
ஈரோட்டில், பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவ-மாணவிகள் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
தமிழகத்தில் கடந்த அண்மையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த கட்டண உயர்வுக்கு மக்களும், பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் காலை கோபி கலை அறிவியல கல்லூரி மாணவ-மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கல்லூரி செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக ஈரோடு மாவட்டம் கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் பகல் 11 மணி அளவில் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு கரட்டடிபாளையம் கல்லூரி செல்லும் சாலையில் ஒன்று கூடினர்.
பின்னர் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், அதை திரும்பப்பெற கோரியும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி துணை காவல் கண்காணிப்பாளர் செல்வம், தாசில்தார் பூபதி, ஆய்வாளர் பாலமுரளிசுந்தரம், போக்குவரத்து ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் அங்கு சென்று மாணவ - மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் கூறும்போது, "பேருந்து கட்டணத்தை உயர்த்தினாலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பேருந்து பாஸ் வழங்குவது தொடர்ந்து நீடிக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. எனவே, சாலை மறியலை கைவிட்டு கலைந்து செல்லுங்கள்" என்றனர்.
அதனை ஏற்றுக் கொண்ட கல்லூரி மாணவ - மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு மதியம் 1 மணி அளவில் மீண்டும் கல்லூரிக்கு திரும்பினர்.
கல்லூரி மாணவ - மாணவிகளின் 2-வது நாள் சாலை மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.