மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டம்... பெண் காவலருக்கு ஆட்டம் காண்பித்த மாணவன்!
கோடை விடுமுறைக்குப் பிறகு அரசு கல்லூரிகள் இன்று தொடங்கின. சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, கல்லூரி செல்ல மாணவர்கள் தங்களை
தயார்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கல்லூரியின் முதல் நாள் பயணத்தை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
மாணவர்களின் இந்த ஏற்பாடு குறித்து போலீசாருக்கு தெரிய வந்ததை அடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல்
கல்லூரிகளுக்கிடையே ஏற்படும் மோதல் சம்பவங்களை தடுக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை 11.15 மணியளவில் சென்னை, எஸ்.ஐ.இ.டி. பேருந்து நிறுத்தத்தில் இருந்து நந்தனம் கல்லூரி மாணவர்கள் பஸ்டே கொண்டாட காத்து கொண்டிருந்தனர். அப்போது 18 கே பேருந்து வந்ததும், பஸ்சுக்கு, மாணவர்கள் மாலை அணிவித்தனர். பஸ் புறப்படும்போது ஒரு மாணவன் பஸ் கூரை மீதேறினான்.
உடனே அங்கு இருந்த பெண் காவலர் ஒருவர் எச்சரிக்கை செய்தார். பின்பு பஸ் சிறிது நேரம் சென்றவுடன் அதே மாணவன் கூரையின் மீது மீண்டும் ஏற முயற்சி
செய்தான்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் காவலர் அந்த மாணவனைப் பிடிக்க ஓடினார். அந்த மாணவன், காவலர்களுக்கு ஆட்டம் காண்பித்துவிட்டு, வேறு
வழியில்லாமல் மீண்டும் பஸ்சுக்குள் ஏறி மாணவர்களிடம் அடைக்கலம் ஆனான். ஆனாலும், அந்த மாணவனை போலீசார் விடவில்லை. பஸ்சுக்குள் நுழைந்து அந்த மாணவனை இழுத்தனர்.
உடனே அந்த மாணவன் மயக்கம் அடைந்தான். இதனால் பதறிப்போன போலுசார் தண்ணீர் கேனை எடுத்து வந்தனர். அப்போது சக மாணவர்கள், அக்கா... அக்கா...
அவனை விட்டுடுங்க என்று கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பெண் காவலரும் அந்த மாணவனை விட்டுவிட்டார். இதனால் அப்பகுதியில்
சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.