ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு: 51-வது நாளாக நீடிக்கும் போராட்டம்; மாணவர்களும் ஆதரவுக் கரம்...
தூத்துக்குடி
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் வலியுறுத்தி தூத்துக்குடியில் போராட்டக் குழுவினர் 51-வது நாளாக போராடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கிராம மக்களும், மாணவர்களும் போராடுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி அ.குமரெட்டியபுரம் மக்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 51-வது நாளாக நீடிக்கிறது.
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பண்டாரம்பட்டி கிராம மக்களும், வடக்கு சங்கரப்பேரி பகுதி மக்களும் நேற்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் ஏ.சி.முத்தையா ஐ.டி.ஐ. முன்பு மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதற்கு இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த பிரேம் தலைமை தாங்கினார்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்" என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோன்று தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், சாயர்புரம் போப் கல்லூரி, மறவன்மடம் பிஷப் கால்டுவெல் கல்லூரி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.