போடி,

போடியில், ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சசிகலா ஆதரவாளர்கள் மீது கல் எறிந்து சண்டையில் ஈடுபட்டனர். பின்னர், இவர்களும் கல் எறிந்து சண்டையிட்டதால் அந்தப்பகுதி பதற்றத்துடன் காணப்பட்டது.

தேனி மாவட்டம் போடியில் உள்ள சுப்புராஜ் நகரில் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளது.

நேற்று மாலை 30 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு வந்து, அலுவலகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்து எறிந்தனர். பின்னர் அலுவலக வளாகத்தின் முன்பகுதியில் இருந்த நாற்காலிகளை தூக்கியடித்து உடைத்தனர்.

இதனை பார்த்து தடுக்க வந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் நகர மாணவரணி செயலாளர் சேசு என்ற ராஜ்வேலை தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அலுவலகத்திற்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டது.

தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே உள்ள சசிகலா ஆதரவாளரான நகர செயலாளர் பாலமுருகன் வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். அதில் வீட்டின் முன்பு நின்றிருந்த அவருடைய காரின் பக்கவாட்டு கண்ணாடி சேதம் அடைந்தது.

அப்போது வெளியே வந்த அவருடைய மனைவி விஜயலட்சுமி மீது கல் விழுந்தது. இதில் அவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது.

பின்னர், எதிர்தாக்குதலாக சசிகலாவின் ஆதரவாளர்களும் கல் எறிந்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியது.