"விநாயகரையும் விட்டு வைக்கவில்லை ஜிஎஸ்டி" - சிலை தயாரிப்பாளர்கள் வேதனை!
ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். பல பகுதிகளில், சாலைகளில் மிக உயரமான சிலைகளை அமைத்து, தினமும் வழிபாடு நடத்தி, கடைசியில் அந்த சிலையை கடலில் கரைப்பார்கள்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் போது, விநாயகர் சிலையின் விலை சற்று அதிகரித்து காணப்படும். இதற்கு ஜிஎஸ்டி தான் காரணம் என சிலை தயாரிப்பாளர்கள் கூறினர்.
நாடு முழுவதும் வரும் 25ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. மகாராஷ்டிரா உள்பட வட மாநிலங்களில், 10 நாட்களுக்கு இவ்விழா பிரமாண்டமாக கொண்டாப்படும். அதை தொடர்ந்து, பிரமாண்ட ஊர்வலம் நடத்தி விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைப்பார்கள்.
ஆனால், இந்த ஆண்டு விநாயகர் சிலையின் விலை சற்று உயர்ந்துள்ளது என்றே சிலை தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
விநாயகர் சிலையை உருவாக்க, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் முக்கியமானது. ஆனால், இதன் மீது கடந்த ஆண்டு, 13.5 சதவீதம் வரி இருந்தது. தற்போது, ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்துள்ளதால், 18 சதவீதமாக வரியை உயர்த்தியுள்ளனர்.
விநாயகர் சிலைக்கு வண்ணம் பூச தேவைப்படும் பெயின்ட் மற்றும் வார்னிஷ் மீது கடந்த ஆண்டு, 13.5 சதவீத வரி இருந்தது. தற்போது, 28 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், சிலையை அலங்கரிக்க தேவைப்படும் கிரீடம் உள்ளிட்ட அலங்கார பொருட்களின் விலையும் ஜிஎஸ்டியால் உயர்ந்துள்ளது.
இதனால், விநாயகர் சிலையின் விலையும் இந்த ஆண்டு கடந்த ஆண்டைவிட ஒன்றரை மடங்கு அதிகமாக இருக்கும் என்றனர்.