வாக்காளர் பட்டியல் திருத்தம் (S.I.R.) என்ற பெயரில் பாஜக அரசு மக்களின் வாக்குரிமையைப் பறிக்க முயற்சிப்பதாகவும், இந்த ஜனநாயக விரோத செயலை சட்டரீதியாகவும், மக்கள் துணையுடனும் எதிர்கொள்வோம் என ஸ்டாலின் எச்சரித்தார்.

MK Stalin speech on 2026 election : தி.மு.க. நிர்வாகிகளுக்கான ‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், என்னுடைய வாக்குச்சாவடியில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்வேன் என்று ஒவ்வொரு கழக உடன்பிறப்பும், உறுதியேற்று, களப்பணியாற்றினால், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முன்னிலை பெற்று, 2026-இல் ஏழாவது முறையாக கழக ஆட்சி அமைவது உறுதியாகிவிடும்.

2026-இல் நடக்க இருக்கும் ஜனநாயகத் தேர்தல், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்! தனித்தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்கும் நம்முடைய ஆட்சியா? டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா? என்று தீர்மானிக்கும் தேர்தல்! தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் – தனித்தன்மையையும் காப்பாற்றப்போகும் தேர்தல்!

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றனும்

தமிழ்நாட்டை அழிக்க, இன எதிரிகளும் - தமிழ்த் துரோகிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வருகிறார்கள். இவர்களை வீழ்த்தி, நம்முடைய மண் – மொழி – மானத்தை காக்க வேண்டும். அதற்காகத்தான் தி.மு.க. கூட்டணி அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும் என்று தொடர்ந்து நான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

தமிழ்நாடு இப்போது சமூக, அரசியல், பொருளாதார படையெடுப்பை சந்தித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு அனைத்து வகையிலும் அநீதி இழைக்கப்படுகிறது. இந்தியின் பேரால் - சமஸ்கிருதத்தின் பேரால் - ஜி.எஸ்.டி.யின் பேரால் - புதிய கல்விக் கொள்கையால் - நீட் தேர்வால் - சட்டங்களால் - உத்தரவுகளால் - ஆளுநரால் என தொல்லை மேல் தொல்லை கொடுக்கிறார்கள் . இது தமிழ்நாட்டின் மீது தொடுக்கப்படும் தாக்குதல். இந்தத் தாக்குதலை முறியடிக்கும் வல்லமை நமக்குத்தான் இருக்கிறது!

பா.ஜ.க.வின் பகல்கனவு திமுக இருக்கும் வரை நிறைவேறாது

பா.ஜ.க.வின் பகல்கனவு, தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும்வரை நிறைவேறாது. அவர்களுக்கும் அது நன்றாகத் தெரியும். ஆனாலும், புதிது புதிதாக குறுக்குவழிகளைத் தேடுகிறார்கள். S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தமிழ்நாட்டில் அடுத்த வாரத்தில் நடைமுறைப்படுத்த இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதைக் காண்பித்து மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் நாம் பணிய மாட்டோம்! இங்கு அவர்களின் ஆர்.எஸ்.எஸ். பாச்சா எதுவும் பலிக்காது!

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பீகார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை, இதே சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணையம் பறித்திருக்கிறது. இதை தொடக்கத்திலேயே நாம் கண்டித்தோம். தமிழ்நாட்டிலும் அதே குறுக்குவழியைப் பயன்படுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாக தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்த முயற்சி செய்கிறது என்று அப்போதே சொன்னேன்.

உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை S.I.R. மூலமாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால், பா.ஜ.க.வும் அதன் கூட்டாளியான அ.தி.மு.கவும் வெற்றிபெற்றுவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள். அதாவது, நேரடியாக தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்கும் தெம்போ திராணியோ இல்லாதவர்கள், மக்களின் வாக்குரிமையை பறித்துட்டு வெற்றி பெறலாம் என்று தப்புக் கணக்கு போடுகிறார்கள்.

S.I.R. முறையை கைவிட வேண்டும் என்பதையும் – வாக்காளர் பட்டியலைச் சீர்ப்படுத்த வேண்டும் என்றால், அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி, கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்பதையும் – இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நேரடியாகவே தி.மு.கழகம் வலியுறுத்தி இருக்கிறது. அதையும் மீறி முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோத செயல்பாடுகளை, சட்டரீதியாக எதிர்கொள்வது மட்டுமல்ல, மக்களுடன் நின்று களத்திலும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு, இன்னும் சொல்லப்போனால், நமக்கு மட்டும்தான் உண்டு!

மக்களின் வாக்குரிமையையே பறிக்கத் துணியும் S.I.R. செயல்பாட்டை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். உண்மையான வாக்காளர் அனைவரும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டியது உங்களுடைய பொறுப்பு.

அதிமுக உரிமைகளை பாஜகவிடம் அடகு வைத்த எடப்பாடி

எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தன்னுடைய சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்ட நிலையில், மக்களின் உரிமைகளைப் பற்றி கவலைப்பட அதற்கு நேரமிருக்காது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளைக் காக்க வேண்டியவர்கள் தி.மு.க.வினரும் - தோழமைக் கட்சியினரும்தான் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மக்கள் நலனையும் - மாநில உரிமைகளையும் காக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்று நான் உறுதி அளிக்கிறேன். தலைகுனிய விடமாட்டார்கள் கழக உடன்பிறப்புகள் என்று அதன் தலைவர் என்ற முறையில் உறுதி ஏற்கிறேன்.

2021 தேர்தல், தமிழ்நாட்டை கொத்தடிமை அ.தி.மு.க. கூட்டத்திடம் இருந்து மீட்ட தேர்தல். 2026 தேர்தல் என்பது, தமிழ்நாட்டை பா.ஜ.க. – அ.தி.மு.க. கும்பலிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல். ஐந்தாண்டு காலம் வளப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டை கபளீகரம் செய்து நாசம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை, வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்தியாக வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி, பெயரளவுக்காவது திராவிட கட்சியாக இருந்த அந்தக் கட்சியை, அமித்ஷாவிடம் விழுந்து சரண்டர் செய்துவிட்டார். அந்தக் கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் விரும்பவில்லை; அவர்களது கட்சிக்காரர்களும் விரும்பவில்லை! மற்ற கட்சியினரும் அந்தக் கூட்டணிக்கு செல்லவில்லை! வி.சி.க. வருகிறார்கள்; கம்யூனிஸ்ட்டுகள் வருகிறார்கள்; காங்கிரஸ் வருகிறார்கள் என்று அவரும் தினமும் சொல்லிப் பார்த்தார்... ஆனால், யாரும் அங்கு செல்லவில்லை... மக்களும் அவர் பேசுவதை நம்பத் தயாராக இல்லை!

தமிழகத்தில் 7வது முறையாக திமுக ஆட்சி

தமிழ்நாட்டுக்கு எதிராக கூட்டணி அமைத்திருக்கும் அவருடைய சந்தர்ப்பவாதத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, அதை நம்முடைய கூட்டணிக்கான வாக்குகளாக மாற்ற வேண்டும்! அந்தக் கடமையும் பொறுப்பும் உங்களுக்குத்தான் இருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் ஏழாவது முறையும் ஏற்றமிகு ஆட்சியை அமைக்க வேண்டும். தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி, திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்தான் இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டும். கலைஞரின் உடன்பிறப்புகள், நினைத்ததை செய்து காட்டுவார்கள் என்று புரிய வைக்க வேண்டும்!